Thursday, January 22, 2009

உன் இதய வாசல்

உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையே நான் இல்லையே
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா

குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பனும் என்னை விட்டுப்பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா

Thursday, January 15, 2009

உதயங்கள் தேடும்

உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே
இறையருள் மலர‌
வனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க‌
வாரும் இறைகுலமே

இருளினில் தவித்திட்ட வேளையிலே- முழு
நிலவென நிலமதில் நடந்தவனே
துயரத்தில் தவித்திட்ட தருணங்களில்- வழித்
துணையென தோள் தந்த இறையவனே
பாவம் நம்மிலே மறையாதோ- தேவன்
பாதம் மனதிலே படராதோ
சோகங்கள் மறைந்திட அருள் தருவாய்

கவலைகளால் மனம் கலங்கையிலே -உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே- உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே -உந்தன்
அன்பின் பலியினில் கல்ந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்

இறைவா இதோ

இறைவா இதோ வருகின்றோம்- உம்
திரு உள்ளம் நிறைவேற்ற

கல்லான இதயத்தை எடுத்துவிடு -எமை
கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு-2
எம்மையே நாங்கள் மறக்கவிடு -கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு

பலியென உணவைத் தருகின்றோம் -நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம்-2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்- எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு

அன்பின் திருக்குலமே

அன்பின் திருக்குலமே இறை
இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒருமனதாய் கூடித்
தொழுவோம் புகழ்பலியாய்
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
ம‌றையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்

இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை
இழந்த தியாகம் உரைப்போம்
சுயநலம் மறைய சமத்துவம் வளர‌
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்

இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் இந்த‌
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும் திரு
விருந்து பகிர்வில் மகிழ்வோம்
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ‌
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்

அழைக்கும் இறைவன்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள்
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே-2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே-2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே-2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்